Iconoclast.

பொதுவாக, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கைகளையும், தனிநபர் வழிபாட்டையும் உடைக்கும் ஒரு நபரே Iconoclast. அதாவது, கலகக்காரர். யார் வேண்டுமானாலும் Iconoclast ஆகி விட முடியாது. இந்தியாவில், தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கேள்விகேட்டு உடைத்து, அறிவை உபயோகித்து எது நல்லது எது கேட்டது என்று தரம்பிரித்து அறியும் திறன் உள்ள ஒருவனே Iconoclast ஆக முடியும். எத்தனை மாட்டுத்தனமான சிந்தனைகள் நம்மீது திணிக்கப்படுகின்றன இங்கே ! கலாச்சார ரீதியாக எந்த வகையிலும் ஒரு தனிமனிதன் நல்லறிவைப் பெற்றுவிடக்கூடாது என்றே இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் - மீடியாவும் அரசும் மதமும் கட்சிகளும் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி ஒரு மனிதன் சிந்தனை விடுதலை அடைவது மிகக்கடினம் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் சினிமா நடிகர்களே கடவுள்கள். ஒன்றுக்கும் உதவாத ஊழல் அரசியல்வாதிகளே தலைவர்கள். குப்பையான pulp நாவல்களே இலக்கியங்கள். தொலைக்காட்சியில் வரும் படு அசிங்கமான நிகழ்ச்சிகளே பொழுதுபோக்கு. ஏன் இப்படி இருக்கிறது? உலகெங்கும் உள்ள நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள், தலைசிறந்த நடிகர்கள் ஆகிய எதுவும் இங்கே உள்ளே நுழைய முடியாத சூழல். தமிழகத்தின் பெரும் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்களே படுமட்டமான ரசனையை உடையவர்களாகத் திகழ்கின்றனர். அப்படி இருக்கையில், இவர்கள் எங்கே நல்ல விஷயங்களைப் பரிந்துரைக்கப்போகிறார்கள்?

ஆகவேதான் நம்மால் வழிவழியாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளையும் ரசனை முறைகளையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். நமது மதம் இப்படிச் செய்யச் சொல்கிறதா? கேள்விகளைக் கேட்போம். ஏன் இப்படி நடக்கிறது என்று வினவுவோம். நமது மதம், குறிப்பிட்ட ஜாதியினரை அசிங்கம் என்று சொல்கிறதா? அந்த மத விதிகளை உடைப்போம். கேள்வி கேட்போம். பொதுவில், மனித ரசனை இங்கே மலையளவு மாறவேண்டியிருக்கிறது. இன்னமும் ராஜேஷ் குமார் போன்றவர்களையே சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் கும்பல்தான் இங்கே அதிகம். பாலச்சந்தரே உலக இயக்குநர். கமல்ஹாசன் உலக நாயகன். இங்கே அடிமட்ட ரசனையைப் பரப்பும் எவராக இருந்தாலும், இப்படி 'உலக' என்று ஆரம்பிக்கும் ஒரு பட்டம் அவர்களுக்குத் தமிழகத்தின் ஆட்டுமந்தைகளின் சார்பில் வழங்கப்படுகிறது. பட்டம் கிடைத்ததும், அவர்கள் கடவுளர்களாக மாறிப்போனதொரு மனநிலையில் ஊறித்திளைத்து, தங்களது வழிபாட்டு முறைகளை மக்களுக்கும் எடுத்து இயம்புகின்றனர். எவ்வளவு அசிங்கம் இது !

அரசியலை எடுத்துக்கொண்டால், மக்களால் வழிபடப்பெறும் அரசியல்வாதிகளின் ரசனை எந்த நிலையில் இருக்கிறது? மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பரிந்துரைத்து, மக்களின் சுயமைதுன முயற்சிக்குப் பெரிதும் உதவிபுரிவதே இந்த அரசியல்வாதிகளின் முழுநேர வேலையாக இருக்கிறது. நடிகர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?  உடன் வேலை செய்யும் நடிகர்களை 'சார்... சார்' என்று அழைப்பது; அவர்களின் கால்களை நக்குவது; உலகத்தில் உள்ள அயோக்கியத்தனம் முழுவதையும் செய்வது; போர் அடித்தால் கட்சி ஆரம்பித்து விடுவது. என்ன நடக்கிறது இங்கே? எந்த நடிகராவது, இயக்குநராவது, தயாரிப்பாளராவது, நடிகையாவது இதுவரை தங்களின் ரசிகர்களை நல்ல ரசனையின்பால் திருப்பியிருக்கிறார்களா? கேடுகெட்ட  மொக்கைத் திரைப்படங்களே இவர்களது பார்வையில் உலகப்படங்களாக  இருக்கின்றன.

நல்ல புத்தகங்கள் எத்தனை இருக்கின்றன தமிழகத்தில். எந்த அரசியல்வாதியாவது இவற்றைப் பற்றிப் பேசி மக்களின் ரசனை முன்னேறுவதற்கு முயற்சித்திருக்கிறார்களா? இல்லையே. கருணாநிதியின் புத்தகங்களே இலக்கியம்.

இப்படித் தமிழகத்தின் கலைச்சூழல் அசிங்கப்பட்டுப் போயிருக்கும் நிலையில், நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பது, மக்களாகிய நமது கையில்மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் அனைவருமே Iconoclast  களாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மட்டுமே மீடியா மற்றும் சமுதாயம் நம்மீது விதிக்கும் விதிகளை உடைக்க முடியும். நல்ல குடிமகனாகவும் வாழ முடியும். எதையும் எதிர்த்துக் கேள்வி கேளுங்கள் நண்பர்களே. சமூக நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் உடையுங்கள். 'தமிழனுக்கு வழிபடுவதற்கு இரண்டு செருப்புகள் எப்போதும் தேவை. செருப்பை அணிபவர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்' என்று ஒரு சொலவடை உண்டு. அதை உடைப்போம். தமிழகத்தில்  வழிபடப்பெறும் ஸ்தானத்தில் இருக்கும் 'கடவுள்களை' உடைப்போம். கடவுளை உடைப்போம் என்றால் , உடனே சிலைகளை உடைப்பது அல்ல பொருள். அப்படி மக்களால் போற்றப்பட்டு, வழிபடப்பெற்றுக்கொண்டிருக்கும்  போலிகளின் மீதான நம்பிக்கையை உடைப்போம்.


ஒரு தனிமனிதனின் ரசனை மாறினால், அவனது வாழ்வு மேம்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளை முதலில் அந்த மனிதன் தூக்கி எறிந்தாலே, அவனது ரசனை வழியை அடைத்துக்கொண்டிருக்கும் தடைகள் உடைந்துவிடும். குமாஸ்தா மனநிலை என்று ஒன்று உண்டு. மிகப்பெரும் செல்வந்தனாக ஒருவன் இருக்கலாம். ஆனால், அவனது மனதில், இன்னும் ஒரு குமாஸ்தாவின் மனநிலையை ஒத்த சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும். அவனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவாறு இந்தச் சிந்தனைகள் அவனைத் தடுக்கும். அந்தக் குமாஸ்தா மனநிலை முதலில் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்.

குமாஸ்தாவாக யாரும் இருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால், குமாஸ்தா மனநிலையோடு இருந்துகொண்டு சகமனிதனுக்கு ஊறு விளைவிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை அல்ல. ரசனை மாறினால் ஒழிய, இந்த குமாஸ்தா மனநிலை நம்மை விட்டுப்போகாது.

எனது அனுபவத்தில், பலரைப் பார்த்திருக்கிறேன். ஆள் பெரிய வேலையில் இருப்பார். ஆனால், மனதில், தனது ஜாதியும் சமூகமும் தன்மீது அமுக்கிய அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, எப்போதடா அடுத்தவன் மீது திணிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். அதாவது, தான் நினைக்கும்படிதான் அடுத்தவன் வாழ வேண்டும் என்று ஒரு சர்வாதிகார சிந்தனை அவர்களிடத்தில் இருக்கும். இவர்களிடம் அதிகாரம் வந்தால், இவர்களின் எண்ணத்துக்கு மாறாக நினைப்பவர்கள் காலி. நரேந்திர மோடி போல. அண்ணா ஹசாரே போல. ஹிட்லர் போல. எத்தனை பேர் இன்னமும் நம் நாட்டில் நரேந்திர மோடியை துதிபாடிக்கொண்டிருக்கிறார்கள்?


இந்தச் சூழ்நிலையில்தான் பெரியார் போல ஒரு Iconoclast  நமக்குத் தேவை. பெரியாரைப் பார்த்தால், நாட்டில் பின்பற்றப்படும் அத்தனை நம்பிக்கைகளையும் எந்நேரமும் திட்டிக்கொண்டும் கேலிசெய்துகொண்டுமே இருந்திருக்கிறார். பெண் விடுதலை பற்றியும், விதவைத் திருமணம் பற்றியும், தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை ஒழிப்பது பற்றியும், மதம் நம்மீது திணிக்கும் அசிங்கங்கள் பற்றியும் எத்தனை முறை அவர் பேசியிருப்பார்? அதைக் கடைபிடித்தும் வாழ்ந்தார். அவர் ஒரு உண்மையான Iconoclast  . ஒரு கலகக்காரர்.

அவரைப்போல், எதையும் கேள்விகேட்டு, அந்த பதில் நமது மனதில் முழுமையாகப் படிந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். ஒரே ஒரு விஷயம். இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் போலவே, சகமனிதனுக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பது நம்மால் சரிவரப் புரிந்துகொண்டுவிடப்பட்டாலேயே, எவருக்கும் எந்தத் துன்பமும் விளைவிக்காமல் வாழ்ந்துவிடலாம்.

ஆகவே, நல்ரசனையோடு, விசாலமான மனதோடு, ஒரு Iconoclast  ஆக வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை சமுதாயம் திணிக்கும் அசிங்கமான சிந்தனைகளை உடைப்போம்.


                                                                                                                     
                                                                                                                                          -- வீராசாமி

14 பேர் சொல்றாங்க...

  1. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    நா பதிவுகள் என்று படிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது........இதுவரை நான் படித்ததில் இது One of the BEST........

  2. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    எனக்கு புடிச்சதுதான் எல்லாருக்கும் புடிக்கணும்.........நா குப்பைனு சொன்னா அது மத்தவங்களும் குப்பைனு சொல்லணும்..........மாத்தி சொன்னா, அவனுக்கு ரசனை இல்ல ............... இந்த போக்கு நெறயவே இங்க இருக்கு............ எனக்கு இட்லி புடிக்காதுன்னு - வாயில வெச்சு திணிச்சு திங்க சொல்ற ஆளுங்க உலவும் இடம் இது...............

    காந்திய திட்டுவாங்க
    நேருவ திட்டுவாங்க
    சே வாழ்கனு சொல்லுவாங்க
    பெரியார திட்டுவாங்க
    ரஹ்மான நக்கல் பண்ணுவாங்க
    இளையராசாவ கிண்டல் பண்ணுவாங்க
    சாருவ குதறி எடுப்பாங்க
    ஜெயமோகன மொக்கைன்னு சொல்லுவாங்க
    ஹசாரே வாழ்க - ஒழிக ன்னு சொல்லுவாங்க

    ஆனா இவுங்கள பத்தி நெறைய பேரு ஒண்ணும் படிச்சிருக்க மாட்டாங்க..............கேட்டா எங்க மாமாவோட நண்பர் சொன்னார்....பஸ்ல போகும் போது ஒருத்தர் சொன்னார்....................இப்புடித்தான் இங்க நடக்குது..போறபோக்குல ஒருத்தர புகழ்வதும் - எலாரும் சொல்றாங்களேன்னு ஒருத்தர திட்டுறதும் தான் இங்க சகஜமா நடக்குது..............ஒருத்தர விமர்சனம் செய்யும் முன்னாடி அவுங்க என்ன செஞ்சாங்க - எழுதியிருக்காங்க ஒண்ணும் தெரியாது.......ஆனா திட்ட/புகழ வேண்டியது.......................

    சுருக்கமா சொன்னா - சொந்தமா யோசிக்க யாரும் விரும்புறதில்லையான்னு தெரியல (இது சொல்லுறதுனால நா பெரிய அப்பாடக்கர் என்று அர்த்தம் இல்ல).

    ஏற்கனவே வர மெயில்கள், SMSகளையே forward செஞ்சு பழகிட்டோம்.....................அதோடா நீட்சி தான் இதெல்லாமா ?? தெரியல.............

  3. எஸ்.கே என்ன சொல்றாருன்னா:

    அபிமானம் என்பது யாருக்கு வேணும்னாலும் எதுமேலயாவது/யார் மேல வேணும்னாலும் இருக்கலாம். ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு ஒருவருக்கொருவர் அநாகரிகமாக சண்டை போட்டுக் கொள்வதும், தன்னோட கருத்தை அடுத்தவர் மேல வலிந்து திணிப்பதும்தான் தவறு.

    அதேபோல் யார் வேணும்னாலும் யாரை வேணும்னாலும் விமர்சிக்கலாம். ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கனும். அடுத்தவர் சொன்னார் என்று தானும் அதையே சொல்வது(இதனால் தன்னை அறியாமலேயே ஒரு வெறுப்பு வந்துடும்)என்பது கொஞ்சம் மோசம்தான். சில சமயம் அந்த விமர்சனம் மனசை புண்படுத்துற அளவுக்கு கூட போயிடுது.

  4. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    // எனது அனுபவத்தில், பலரைப் பார்த்திருக்கிறேன். ஆள் பெரிய வேலையில் இருப்பார். ஆனால், மனதில், தனது ஜாதியும் சமூகமும் தன்மீது அமுக்கிய அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, எப்போதடா அடுத்தவன் மீது திணிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். //

    சத்தியமான வார்த்தைகள்..............கம்னாட்டி பசங்க.........................ஆள பாத்து, ஊர பாத்து - நீங்க "அவுங்களா"...மயிரான்னு கேக்குற ஆளுங்க இன்னும் இருக்குறாங்க.............பல தடவ எனக்கே ட்ரைன்ல இது நடந்திருக்கு..................கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம - பாத்து கொஞ்ச நேரத்துலயே - ஜாதிய பத்தி பேசுவாங்க..............

    எவ்வளவோ சம்பாரிக்கலாம் -காசு வெச்சுருக்கலாம் - பேசும் போது Fuck, bro போன்ற வார்த்தைகள உபயோகிக்கலாம்...................சே, ஹுகோ சாவேஸ் பத்தி பேசலாம், உலக சினிமா,ஆர்ட் எத பத்தி வேணாலும் பேசலாம்....................இதெல்லாத்தையும் விட முக்கியமா எனக்குப்படுவது மனுசன மனுசனா மதிக்கத் தெரியனும்............இன்னும் சொல்லப்போனா..உயிரிணங்கள உயிரினங்களா மதிக்கத் தெரியனும்.......

    மனதளவில் - முக்கிய சிந்தனை அளவில் எப்புடி இருக்காங்க.அதான முக்கியம் ??........

    இதெல்லாம் பேசிக்கொண்டே .........வீட்டில் இருக்கும் பெண்கள மோசமா நடத்துற ரெண்டு மூணு பேரை எனக்கு தெரியும்.

    பிற்போக்குவாதிகள கூட சகிச்சுக்கலாம்..........இந்த மாதிரி pseudo- முற்போக்குவாதிகள் தான் எரிச்சல்படுத்துறாங்க..........

  5. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    என்னோட கருத்து என்னன்னா, விவாதம் அப்புடீங்க்குற அளவுல கூட அடுத்தவங்களை அவங்களோட சொந்தக் கருத்தைச் சொல்லாமல் விமர்சிக்கப் பழகிட்டோம். 'உன்னோட கருத்து தப்பா இருக்கலாம்; ஆனா அதைச் சொல்லும் உரிமையை உனக்கு மீட்டுத்தருவதற்கு என் உயிரையும் கொடுப்பேன்' அப்புடீன்னு வால்டேர் சொன்னதை என்னோட motto வா நினைக்கிறேன்.

    இன்னொன்னு - கொழந்த சொன்னபடி, சமூகத்தை கண்டபடி விமர்சனம் பண்ணுற பல பேர், எதைப்பற்றி விமர்சிக்கிரோமோ, அதைப் பற்றித் தெரிந்துகொள்வதே இல்லை. சும்மா, அடுத்தவன் பண்ணுறானா, நாமளும் பண்ணுவோம் அப்புடீன்னு விமர்சிக்குறதுதான் பலபேரோட வேலையா இருக்கு. ஒரு விஷயத்தை விமர்சனம் பண்ணனுமா? அப்போ அதைப் பத்தி நல்லா ப்ரிப்பேர் பண்ணிட்டு வாங்கய்யா. அதை விட்டுபுட்டு, சும்மா ஜல்லியடிக்க வேண்டியது.

  6. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    இவ்வளவு அருமையான கட்டுரையை எழுதிய நண்பர் தனது பெயரை குறிப்பிடாததை யாரேனும் கவனித்தீர்களா

  7. நவநீதன் என்ன சொல்றாருன்னா:

    அருமையான பதிவு!!!இந்த பதிவோட முதல் பத்திய படிச்சவுடனே பெரியார் தான் என் நினைவுக்கு வந்தார்.ஆனால் நம்ம சமூகத்துல இருக்குற அடிப்படைவாதிகள் இந்த மாதிரி கேள்வி கேட்கிறவர்களை எங்க நிம்மதியா இருக்க விடறாங்க மதங்கள்ல இருக்குற முட்டாள் தனமான வழக்கங்கள கேள்வி கேட்ட தஸ்லீமா நஷ்ரீன் போன்றவர்களை அடிச்சு விரட்டியிருக்காங்க ரொம்ப நாளாவே அருந்ததி ராய ஊடகங்கள் தீவிரவாதி மாதிரி சித்தரச்சிக்கிட்டு இருக்காங்க:(

  8. வீராசாமி என்ன சொல்றாருன்னா:

    அந்த நண்பரின் பெயர் தான் வீராசாமி என்று இருக்கிறதே .

  9. வீராசாமி என்ன சொல்றாருன்னா:

    நண்பர் நவநீதன் . .அடிப்படைவியாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். தஸ்லீமா நஷ்ரீன் மட்டுமல்ல. திண்ணியத்தில் மலத்தை தலித்களின் வாயில் திணித்தாரே ஒரு மெத்தப் படித்த ஆசிரியர். அதைப்போலவே, பல மடையர்கள் இருக்கிறார்கள். அதேபோல், அருந்ததி ராய் விஷயம். அவரது சமூகக் கருத்துகள், நான் வரவேற்கிறேன். ஆனால், நம்மூரில், ராணுவம், இந்திய அரசு ஆகியவற்றுக்கு எதிராகக் கருத்து சொல்லிவிட்டால், வாசக்டமி செய்துவிடுவார்கள். பலவந்தமாக. அதனால்தான் மீடியாவும் இதற்கு ஆதரவு. இருந்தாலும், குரலை ஒலிப்போம்.

  10. Katz என்ன சொல்றாருன்னா:

    ரொம்ப யோசிக்க வைக்கும் பதிவு. பெயர் தான் வீராசாமின்னு போட்டு இருக்குல்ல. ஒருவேளை டி.ஆர் ஆக இருக்குமோ?

  11. பாலா என்ன சொல்றாருன்னா:

    எந்தப் பதிவிலும் ‘கமல்ஹாசனை’ இழுக்கும் ஒரு நபர் - எனக்கு நல்ல பரிட்சயம் உண்டு.

    வீராசாமி......

    ===

    பிஆர்பி

  12. வீராசாமி என்ன சொல்றாருன்னா:

    என்னங்க பண்ணுறது. எப்ப பார்த்தாலும் சாருவை சில பேரு வம்பிளுக்குற மாதிரி, நடிகன் அப்புடீன்னு நினைச்சாலே, இந்த கமல் நினைவு தான் வருது :)

  13. வில்லனின் விநோதங்கள் என்ன சொல்றாருன்னா:

    // நடிகன் அப்புடீன்னு நினைச்சாலே, இந்த கமல் நினைவு தான் வருது :) //

    மிஸ்டர் ராஜேஷ் என்கிற கருந்தேள் நோட் திஸ் பாய்ண்ட்.

    நடிகன் என்றாலே அது அன்றும் இன்றும் என்றும் கமல்தான் என்பதை அறிக..

  14. Unknown என்ன சொல்றாருன்னா:

    தமிழன் இருக்கிறான்

Leave a Reply